தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2020, 10:52 PM IST

ETV Bharat / state

காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு

திருச்சி: காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி ஐந்து கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

kamala kannan
kamala kannan

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சியின் பிரதான சந்தையான காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் திறந்தவெளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் தண்ணீர் நிறைந்து குளம்போல் காட்சியளிப்பதால் காய்கறிச் சந்தை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மீண்டும் காந்தி மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனிடையே, காந்தி மார்க்கெட்டிற்கு மாற்றாக கள்ளிக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட நவீன காய்கறி வணிக வளாகத்தைத் திறக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது, "பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற்றுவருகிறது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தண்ணீரில் கழிவுநீரும் சேர்ந்திருப்பதால் கரோனாவைவிட கொடிய தொற்றுப் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

மழை காரணமாக வியாபாரிகள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். இதனால், அவர்கள் உடல்ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளிக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட சந்தையை மாவட்ட நிர்வாகம் திறக்கலாம். அங்கு விருப்பப்படும் வியாபாரிகள் வியாபாரம் செய்துகொள்ளலாம்.

அதேசமயம் திருச்சி காந்தி மார்க்கெட்டைத் திறக்க செப்டம்பர் 15ஆம் தேதிவரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாபாரிகள் சங்கம் போராட்டம்

காந்தி மார்க்கெட் மூடப்பட்டது கரோனாவால்தான். கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரத்திற்காக காந்தி மார்க்கெட் மூடப்படவில்லை. வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஐந்து கட்ட போராட்டங்கள் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:திடீரென டெல்லி விரையும் தமிழ்நாடு அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details