திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உப்புபாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு (39). இவர் காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணிசெய்துவந்தார். மேலும், இவர் பாஜக திருச்சி பாலக்கரை மண்டல செயலாளராகவும் இருந்துவந்தார். இந்நிலையில், இவர் கடந்த 27ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் காந்தி மார்க்கெட் நுழைவுவாயில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது ஒரு கும்பல் விஜயரகுவை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய விஜயரகுவை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விஜயரகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காந்தி மார்கெட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் இஸ்லாமியர்களுக்குத் தொடர்பிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். கட்சி முன்விரோதம் காரணமாகவே இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்தகைய பயங்கரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.