தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் மத்திய பல்கலைக்கழகம் - துணைவேந்தர் தகவல்! - Educational news in tamil

திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை, இந்த ஆண்டிற்குள் திருச்சியில் தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மத்திய பல்கலைக்கழகம் - துணைவேந்தர் தகவல்!
திருச்சியில் மத்திய பல்கலைக்கழகம் - துணைவேந்தர் தகவல்!

By

Published : Mar 10, 2023, 10:42 AM IST

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி:தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், இன்று (மார்ச் 9) திருச்சியில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மு.கிருஷ்ணன், “திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா, வருகிற 12ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

அந்த விழாவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி.பத்மநாபன் தலைமை வகித்து பட்டங்களை வழங்க உள்ளார். மேலும் டெல்லியில் உள்ள சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி.சோண்டி முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு 917 மாணவ, மாணவிகள் பட்டம் பெற உள்ளனர். அதில் 523 மாணவிகளும், 394 மாணவர்களும் அடங்குவார்கள். 500 ஏக்கர் பரப்பளவிலான திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில், இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2,500 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் 1,900 மாணவர்கள் நமது பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள்.

30 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழகம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. பலர் நுழைவுத்தேர்வை கண்டு அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு அச்சம் தேவையில்லை. அதிக அளவிலான தமிழ்நாட்டு மாணவர்கள், மத்திய பல்கலைக்கழகத்தில் இணைந்து படிக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை, சுமார் 150 பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் அளித்து வருகிறது. தற்போது மாநில அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

நமது பல்கலைக்கழகத்தில் 27 துறைகளில், 64 வகையான பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் (2023 - 2024) 4 பாடப் பிரிவுகளில் 5 ஆண்டு நேரடி படிப்புகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகக் கிளையை வரும் கல்வியாண்டில் திருச்சியில் தொடங்க உள்ளோம்.

இதற்காக சூரியூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பை மத்திய பல்கலைக்கழகத்திற்கு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகக் கிளையை இந்த ஆண்டுக்குள் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் 20,000 ரூபாய் கட்டணத்தில் ஒரு மாணவர் முதுநிலை பட்டப்படிப்பை படித்து முடிக்க முடியும்.

உணவு மற்றும் தங்குவதற்கு மாதம் 3,000 மட்டுமே ஒரு மாணவருக்கு செலவாகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்க அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் முன்வர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற இலவச வகுப்பு - அரியலூர் ஆட்சியர் அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details