மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று (மே.21) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா காலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தது நல்ல விஷயம். அவர் மூலம் பல நல்ல வளர்ச்சிப் பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக அவர் இருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல்கட்டமாக கரோனாவை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறார். குடும்பத்திற்கு 4,000 ரூபாய் அறிவித்து, முதல் கட்டமாக 2,000 ரூபாய் வழங்கியுள்ளார். கரோனாவால் தினசரி பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
ஜூன் இரண்டாவது வாரம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வரை பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும். அரசு, தனியார் மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் உள்ளது. வெண்டிலேட்டர் வசதி இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் 40 இடங்களில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, பெரம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் பிளான்ட் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்க வேண்டும் என்றும், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.