திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி என்பது மரபு தர்மத்திற்கு உட்பட்டது. இடைத்தேர்தல் எல்லாம் ஒரு கட்சியின் பலம் மற்றும் வளர்ச்சி அளவுகோல் இல்லை. கூட்டணி தர்மத்தோடுதான் நடைபெறுவது கண்ணியமாக இருக்கும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். மக்கள் செல்வாக்கு பெற்றவராக, மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் பணத்தை, ஆளுங்கட்சி தண்ணீர்போல் செலவிடுவார்கள்.
தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 350 கோடி ரூபாயை இடைத்தேர்தலில் செலவிட்டுள்ளார்கள். 3 திமுக அமைச்சர்களின் மாவட்டம் ஈரோடு. பணம் அதிகளவு செலவு செய்யப்படும் என்பது, தேர்தலில் பார்க்கும்போது தெரியும். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி பலம் வாய்ந்தது.
ஈரோட்டில் இருந்து அதிமுக சார்பாக, ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் உள்ள மாவட்டம் இது. அதிமுக விருப்ப மனுக்களை கொடுக்க தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்துள்ளார். நிற்கக்கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.