திருச்சி: மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்த துரைசாமி வீராகோவில்பட்டி பகுதியில் சொந்தமாக கல்குவாரி வைத்துள்ளார். இங்கு கல் உடைக்கும் இயந்திர ஓட்டுநராக கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டியை சேர்ந்த நல்லுகவுண்டர் மகன் மணிவேல் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் இன்று (ஆக.2) காலை வழக்கம்போல் இயந்திரம் மூலம் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாகனத்தின் என்ஜின் மட்டும் வெகுநேரமாக இயங்கியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஓட்டுநர் மணிவேல் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் தொங்கியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மற்றொரு ஓட்டுநரை வரவழைத்து என்ஜின் இயக்கத்தை நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மணப்பாறை அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கு சென்ற மணிவேல் குடும்பத்தினர் கல்குவாரி உரிமையாளர் உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை குவாரி உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து மணிவேல் உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிவேல் மனைவி எட்டு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குரோம்பேட்டை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து