தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 5:35 PM IST

ETV Bharat / state

சாலையோர மக்களுடன் தீபாவளி கொண்டாடிய சிலம்ப மாணவி.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

Trichy Diwali: திருச்சியில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உதவிய பள்ளி மாணவியில் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோர மக்களுடன் தீபாவளி கொண்டாடிய சிலம்ப மாணவி
சாலையோர மக்களுடன் தீபாவளி கொண்டாடிய சிலம்ப மாணவி

சாலையோர மக்களுடன் தீபாவளி கொண்டாடிய சிலம்ப மாணவி

திருச்சி:சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி பள்ளி மாணவி சுகித்தா, சிலம்ப போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆடை மற்றும் இனிப்பு வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு என பல்வேறு வணிகப் பகுதிகளில் ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் வாங்கி, பண்டிகையைக் கொண்டாடக் கனவுகளுடன் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலர் காத்திருந்தாலும், தீபாவளியின் போது புத்தாடைகள், பட்டாசு வாங்க முடியாமல் ஏங்கும், ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளும் உள்ளன.

"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு" என்ற நோக்கில், தமிழர்களின் பாரம்பரிய சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த, செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தா, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இயலாத மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர நடைபாதைகளில் வசித்து வரும் முதியோர்களுக்கு, சிலம்ப போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகை மற்றும் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சேலை, வேட்டி, துண்டு மற்றும் இனிப்பு வகைகளுடன் 100 ரூபாய் பணமும் வழங்கி தீபாவளியை மனநிறைவுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.

சுகித்தா தனது சகோதரர் சுஜித் உடன் சேர்ந்து, திருச்சி மாநகரில் காவிரி பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் சாலை உள்ளிட்ட பல இடங்களில், சாலையோரம் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களைச் சந்தித்து, துண்டு அணிவித்து அவர்களுக்கான தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். பள்ளி மாணவியின் இத்தகைய செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து மாணவி சுகித்தா கூறுகையில்,”இரண்டாவது ஆண்டாக இத்தகைய சமூக செயலை செய்யும் தனக்கு இது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. ஆதரவற்றவர்களை அரவணைத்து தீபாவளி திருநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி. இது போன்ற பல சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தமக்கு மன நிறைவு அளிக்கிறது” என மாணவி சுகித்தா தெரிவித்தார்.

"எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற கூற்றுக்கு இணங்க சாலையோர மக்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சுகித்தாவை போன்று பலரும் இச்சமூகத்தில் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் 2 ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 800 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி பாலாஜி சரவணன் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details