தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2022, 10:57 PM IST

ETV Bharat / state

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

தமிழ்நாட்டில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையினை போக்கும் வகையில் கோதாவரி - காவிரி திட்டத்தினை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசியது தொடர்பான காணொலி
ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசியது தொடர்பான காணொலி

திருச்சி: தமிழ்நாட்டில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையைப் போக்க கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் வருகின்ற பிப்ரவரி 26, 27ஆகிய தேதிகளில் விவசாய சங்க, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையிலான நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பித்து நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் இயக்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசுகையில், “சமீபத்தில் நடைபெற்ற அனைத்து மாநில அரசு தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசியது தொடர்பான காணொலி

இதனால் தமிழ்நாட்டின் நதிநீர் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரிசா, சட்டீஸ்கர், தெலங்கானா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசித்து, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு மாநாடு நடத்த ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும். தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை கூட்டி வலியுறுத்த வேண்டும். இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும்.

சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட நீர்ப்பாசன வசதி இல்லாத மாவட்டங்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும். நீர் மேலாண்மை, விவசாயம், பொருளாதாரப் பிரச்னைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு 90 விழுக்காடு நிதி வழங்குவதாக அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் நீரைச் சேமித்து வைக்க வீராணம் போன்ற ஏரி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நதிநீர் இணைப்புக்காக முனைப்புக்காட்டாததாலும், அரசியல் காரணங்களுக்காகவும் இத்திட்டம் தள்ளிப்போகிறது. நதிநீர் இணைப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இதனை அரசியல் பிரச்னையாக கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கும் தமிழனின் இதயம்

ABOUT THE AUTHOR

...view details