தமிழ்நாடு

tamil nadu

'ஆன்லைன் வகுப்புகளைப் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும்' - ஐஜி அறிவுரை

திருச்சி: ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் முழுமையாகப் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்று மத்திய மண்டல ஐஜி பள்ளி முதல்வர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

By

Published : Jun 9, 2021, 2:08 AM IST

Published : Jun 9, 2021, 2:08 AM IST

ETV Bharat / state

'ஆன்லைன் வகுப்புகளைப் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும்' - ஐஜி அறிவுரை

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்
மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் புதிதாக நியமனம்செய்யப்பட்டார். திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பாலகிருஷ்ணன் நேற்று (ஜூன் 8) ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "பேரிடர் காலமான இந்தக் கரோனா நோய்த்தொற்று பரவல் காலக்கட்டத்தில், மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு நேரிடையாகச் சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இணையவழி மூலம் முதல் பெரும்பாலான பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் தகாத முறையிலும், பாலியல் தொந்தரவுகளைத் தரும் வகையிலும் இளம் பள்ளி மாணவிகளிடம் நடந்துகொண்டவிதம் குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, இதுபோன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு, பாலியல் ரீதியான தொந்தரவுகளைப் போக்கிடும் வகையில் ஆன்லைன் மூலமாகப் பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுடன் நேற்று (ஜூன் 7) காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்

ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள சுமார் 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

இணையவழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் அனைத்துப் பள்ளிகளும் அரசின் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றிச் செயல்பட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, பள்ளிகளில் நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாகப் பதிவுசெய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினை சார்ந்த இரு நபர்கள் மூலமாகக் குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பதிவுகள் முறையாக ஆய்வுசெய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவியர் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல் துறையின் உதவி எண்கள் பள்ளி நிர்வாகத்தினரால் மாணவ மாணவிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ மாணவிகள் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி ஆன்லைன் வகுப்புகளில் பயில்வதை உறுதிசெய்ய வேண்டும்.

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்

மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் அலுவலர்கள் பள்ளி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆன்லைன் மூலம் பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details