தமிழ்நாடு

tamil nadu

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 விழுக்காடாக உயர்த்த வேண்டும்: நெல்லை முபாரக் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 8:12 PM IST

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை வைத்துள்ளார்.

Nellai mubarak
நெல்லை முபாரக்

திருச்சி:எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் மத்திய மற்றும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் பேசுகையில், "நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தடம் பதிக்கச் செய்து சாதனை புரிந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக்கொண்டதுடன், மத்திய அரசுக்கு எதிரான குரல்களை முடக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றைக் கொண்டு சோதனையை மேற்கொண்டதைக் கண்டிக்கிறோம்.

பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 37 இஸ்லாமியச் சிறைவாசிகளைத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி நடத்தும் அதற்கு முன்னோட்டமாக வருகிற 9ம் தேதியன்று ஜனநாயக தலைவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்றத்தை நோக்கி பேரணியை எஸ்டிபி கட்சி நடத்தவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ என்ற பயணத்தை ஊழலுக்கு எதிராக அண்ணாமலை செய்கிறார், இதற்கு அண்ணாமலைக்குத் தகுதியே இல்லை. ஊழலையே முகாந்திரமாகக் கொண்டிருக்கும் பாஜக எவ்வாறு ஊழலுக்கு எதிரான பேரணி நடத்த முடியும். ஆர்எஸ்எஸ் மூலமாக ஐபிஎஸ் ஆக்கப்பட்டவர் அண்ணாமலை, கர்நாடகாவில் அவர் ஒன்றும் செய்யவில்லை. அண்ணாமலையின் பயணம் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது, தமிழகத்தில் அவருக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை என்றார்

மேலும் தமிழகத்தில் நாங்குநேரி, வேங்கை வயல் போன்று சாதியின் பெயரால் நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலையை அளிப்பதுடன், 37 மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திட வேண்டும் எனக் கூறினார்.

தஞ்சை டெல்டா மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மோசமான வானிலை நிலவுவதுடன் தென் மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லாத பஞ்சம் நிலவுகிறது, தமிழக அரசு இதனை வறட்சிப் பகுதியாக அறிவித்து நிவாரணம் அளிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் நினைத்தால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும். வேளாண்மையை காப்பாற்ற விட்டால் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியாது என்பதனை புரிந்து கொண்டு விவசாயிகளுக்கு உதவிகளை செய்திட வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details