திருச்சி மாவட்டம் புத்தூர் நான்கு ரோட்டில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் செயல்பட்டுவந்தது. இந்த மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால், 1993ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கிருந்த வியாபாரிகளுக்கு புத்தூர் சின்ன மைதானத்தில், புதிதாக கட்டப்பட்ட காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியை முறையாகச் செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தப் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவது, இடநெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, கடைகளை அகற்றப் போவதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.