திருச்சி: சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான மாதிரி நீதிமன்ற போட்டி திருச்சி சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது,”தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பாக வழக்கை நடத்தி வாதாடியவர்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது.
இதில், 21 பேரை தேர்வு செய்து, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதியாக, 30 லட்சம் ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளார். சிறைத்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு தேவையான போது, விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்திப் பணி செய்ய வைப்பதில்லை.
மேலும் திருச்சி மத்திய சிறையை முழுமையான பாதுகாப்பான சிறையாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதற்கான 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதே இடத்தில் சிறையை தொடர்ந்து செயல்படுத்துவதா? வேறு இடத்துக்கு மாற்றுவதா என்று அரசு ஆலோசித்துக் கொண்டுள்ளது.