தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 29, 2020, 8:05 PM IST

ETV Bharat / state

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவை நேரில் பார்க்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தீப திருவிழா
Karthigai Deepam

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில், சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமான சுவாமியும் மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், தீப்பந்தம் மலை உச்சிக்கு கொண்டுச் செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் 237 அடி மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றி ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாள்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் தீப திருவிழாவை நேரில் பார்க்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று (நவ. 29) பிற்பகல் 3 மணி முதல் பக்தர்கள் மலைக்கோட்டைக்கு அனுமதிக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details