தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2023, 8:00 PM IST

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோற்றில் முழு பூசணிக்காய் மறைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தும், அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோற்றில் முழு பூசணிக்காய் மறைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தும், அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாயும் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகளுடன் நேற்று காலை முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்; அதே போல் ஆலடியாறு அணையில் துளையிட்டு கீழ் கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெற முடியும்; இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் போது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100 வழங்க உதவிட வேண்டுகிறோம்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது, ”விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், விளைவிக்கும் விளை பொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரான சீனிவாசன் வீட்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறுகிறார். எத்தனை பேருக்கு தருவார்? இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். மேலும் காவிரியில் இருந்து சரியாக தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதை மத்திய அரசு, மாநில அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

நாங்கள் விவசாயிகளுக்கு அனைத்தும் செய்து விட்டோம் என்று சோற்றில் முழு பூசணிக்காயை மறைக்கிறார்கள். நாங்களும் சோற்றில் முழு பூசணிக்காவை மறைக்க முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. மாநில அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் மேலும் தீவிரமடையும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மணப்பாறையில் நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details