Palani Kumbabishekam: திருச்சி:பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், 'வருகிற ஜனவரி மாதம் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவுக்கு முன்பும் நன்னீராட்டின்போதும், அதற்கு பின்பும் கருவறை, வேள்விச்சாலை, கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பழனி ஆண்டவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் தமிழ் மந்திரங்கள் மூலம் கிரியை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை செயல்படுத்துமாறு வேண்டுகோள் மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனிடம் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று மனு அளித்தனர்.
மேலும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு, கடந்த வருடம் ’அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடங்கியது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 47 முதன்மை கோயில்களில் செயல்படுத்தி வந்தது. அதற்கு எந்த நீதிமன்றமும் தடை போடவில்லை. அதற்கு முன் இதே திமுக ஆட்சி கடந்த 1997ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி, கருவறையில் தமிழ் அர்ச்சனை செய்வதை நடைமுறைப்படுத்தியது.
சுற்றறிக்கை மற்றும் செயல்பாட்டை எந்த நீதிமன்றமும் எப்போதும் தடை செய்யவில்லை. மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 2007-ல் ஆறு தமிழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை உருவாக்கி பயிற்சி கொடுத்து, இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு அர்ச்சகர் சான்றிதழும் கொடுத்துள்ளது. பல்வேறு பிரிவு தெய்வங்களுக்கும் உரிய தமிழ் கிரியை மந்திர நூல்களையும் வெளியிட்டது. இவற்றையெல்லாம் எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை.
குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கும், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் முறையே 50-50 என்ற விழுக்காட்டில் மந்திரம் சொல்லி வழிபாடு நடத்துமாறு ஆணையிட்டது.