தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2023, 5:55 PM IST

ETV Bharat / state

அரை கிலோ புளிக்கு அடிதடியா! கடையேவே துவம்சம் பண்ணிட்டீங்களடா.. திருச்சியில் களேபரம்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெண் விஏஒ, காய்கறி வியாபாரி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

அரை கிலோ புளிக்காக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் - திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை

திருச்சி:ஸ்ரீரங்கத்தில் விஏஒ-ஆகப் பணியாற்றி வருபவர், வரகனேரி கல்பாளையத்தைச் சேர்ந்த கலைவாணி. இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் உள்ள MAJ traders என்ற கடையில் சமையலுக்கு புளி வாங்கி சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (மே 15) 'இந்த புளி சரியில்லை உன்னிடம் தான் வாங்கினேன்' என்று கடைக்காரர் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் கடைக்காரர் இப்ராஹிம், விஏஓ கலைவாணி ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து, இப்ராஹிமின் கடையிலிருந்த பெண்கள் சிலர் விஏஓ கலைவாணியை அப்போது தள்ளிவிட்டதோடு அங்கிருந்து விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஏஓ கலைவாணியோ, அங்கு கடை வைத்திருந்த தனது உறவினர்களை அழைத்து வந்து கடைக்காரர் மற்றும் அங்கிருந்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இதனிடையே, இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் அங்கும் இங்குமாக விரட்டியபடி மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்நிலையில், அங்கிருந்த பெண்கள் சிலர் விற்பனைக்காக வைத்திருந்த பாத்திரங்கள், காய்கறிகள் என கையில் கிடைத்தவற்றை அள்ளி ஒருவர் மீது மற்றொருவர் வீசிக் கொண்டனர். இதனால் காந்தி மார்க்கெட் முழுவதும் கலவரமாக காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவம் குறித்து விஏஓ கலைவாணி உள்ளிட்ட இரண்டு தரப்பினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த சம்பவத்தால், அந்த கடையில் இருந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு வீணடிக்கப்பட்டது. இந்நிலையில், மார்க்கெட்டில் ஒருவரையொருவர் காய்கறிகளால் தாக்கிக்கொண்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இதுகுறித்து, திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்டிபிஐ வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் இதுகுறித்து கூறுகையில், கலைவாணி விஏஓ மீது பல ஊழல் புகார்களும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன என்றும் அந்த பகுதி‌‌ பொதுமக்கள் பலர் தெரிவிப்பதாகவும், அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை எனவும் கூறினார்.

இது போன்ற வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி காய்கறி கடையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வியாபாரிகளை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என அவர் தெரிவித்தார். மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட்டில், கடைக்காரர் தரப்புக்கும் வாடிக்கையாளர் தரப்புக்கும் இடையே இவ்வாறு நடந்த அக்கப்போருக்கு காரணம், அரை கிலோ புளி என்பதை நினைத்துப் பார்த்தால் அனைவருக்கும் சிரிப்புதான் வருகிறது.

இதையும் படிங்க:அயன் பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details