தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2023, 6:13 PM IST

ETV Bharat / state

அனுமதியின்றி இயங்கிய ஸ்பா.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது விபச்சார தடுப்புப் பிரிவு வழக்கு!

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மீது விபச்சார தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு வீட்டில் ‘ஷைன் ஸ்பா’ என்ற பெயரில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருள்களை சோதனை செய்தனர். அதில், ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காவல் துறையினர் அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பாவின் மேலாளரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில், ‘தளபதி விஜய் மக்கள் இயக்க’ திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புகளை நடிகர் விஜய் பல்வேறு விதத்தில் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் உலக பட்டினி தினத்தன்று அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று சிறப்பிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், சென்னை நீலாங்கரையில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி, நடிகர் விஜய் மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தும், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கியும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் நடிகர் விஜயின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். மேலும் பல்வேறு கோயில்களில் அபிஷேகங்கள் செய்தும், நடிகர் விஜயின் பெயரில் அர்ச்சனை செய்தும், அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களில் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனையும் நிறைவேற்றி அனைத்து பயிலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த போதிலும் திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்ய மாவட்ட பொறுப்பாளர் இதுபோன்ற சமூக விரோதச் செயலில் ஈடுபட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பேருந்து முன்பு பாய்ந்து பெண் பலி - மகனின் கல்லூரி கட்டணத்திற்காக விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details