திருச்சி மாவட்டம் துறையூர், கொத்தம்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் ஆதித்யா(13). சிறுவன் அப்பகுதியில் உள்ள கரட்டு மலைப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது பாறை மீது உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் தவறி பாறைகளுக்கு நடுவே விழுந்துள்ளது. பின்னர் பாறைகளுக்கு இடையே தலையை விட்டு செல்போனை எடுக்க ஆதித்யா முயற்சித்துள்ளார்.
ஆனால், அவரின் தலை பாறைகளுக்குள் சிக்கிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் ஆதித்யாவால் வெளியில் தலையை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்க முயற்சித்தனர். ஆனால் பலனளிக்கவில்லை.