திருச்சி:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீண்ட இடைவேளைக்குப் பின்னர், கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 'என் மண், என் மக்கள்' நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது நடைப்பயணத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் பாஜக நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால் எதை எதை செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்சினைகளுக்கு மக்கள் சார்பாக, நாங்கள் போராடுகிறோம்.
தமிழகத்தில், பல பகுதிகள் பின் தங்கியிருக்கிறது. இலுப்பூர், தோகைமலை போன்ற சிறு சிறு பகுதி மக்கள் வளர்ச்சி என்பதை தொடாமலேயே போய்விட்டனர். நம்பிக்கையோடு எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் செய்து கொடுக்கிறோம். காவல் துறையின் கவனம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை. முற்றிலும் சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
நடுநிலை தவறிய காவல்துறை:திமுக ஆட்சியில் தமிழக காவல் துறை நடுநிலை தவறிவிட்டது. பாஜக கட்சிக்காரர்களைக் கைது செய்வது மட்டுமே தமிழக காவல் துறையின் குறிக்கோளாக உள்ளது. பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது தவறாகிவிடும். பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதைப் பார்த்த பாஜகவைச் சேர்ந்த சகோதரி நடந்து கொண்ட விதம் பற்றி விவாதிக்கலாம். அதே சமயம், கேள்வி கேட்டதை தவறு என்று சொல்லமாட்டேன். பஸ் டிரைவரோ, கண்டக்டரோ கண்டு கொள்ளாததால் சமூக அக்கறையால் அவர் மாணவர்களைக் கண்டித்திருக்கிறார்.
ஆபாசமாக பேசும் திமுக: சாமானிய மக்களைக் கைது செய்வதன் மூலம், தமிழக காவல் துறையின் மாண்பு குலைந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி பேசியதை திமுக மாற்ற முயற்சிக்கிறது. அவர் பேசியதை விட ஒரு சமுதாயத்தைக் கேவலமாக, மோசமாக யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்கமாக அப்படித்தான் பேசி வருகிறார். திமுகவின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால், அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டுக் கட்டாமல் ஆர்.எஸ்.பாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.