திருச்சி: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் 100வது தொகுதியாக நேற்று (நவ.8) மாலை திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் பகுதியில் இருந்து நடைபயணத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "என் மண் என் மக்கள் யாத்திரையில் 100வது தொகுதியாக ஶ்ரீரங்கம் அமைந்துள்ளது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒத்தி வைத்து, 100வது தொகுதியாக அரங்கநாத பெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
மருது சகோதரர்கள் எப்போது ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து ஶ்ரீரங்கம் கோயில் மதில் சுவரில் ஜம்பு தீவு பிரகடனத்தை ஒட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய அறைகூவலை விடுத்தார்கள். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதே ஶ்ரீரங்கம் கோயிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் இருக்கிற எல்லா கோயில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர்.