தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “காலரா, சின்னம்மை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள், இன்று கரோனா வைரஸ் பாதிப்பு பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அளவில்லாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2016ஆம் ஆண்டு முதல் வறட்சியால் சரியான சாகுபடி செய்ய முடியாமல், இந்த ஆண்டு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு சென்றால் 25 நாட்கள் கழித்து தான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். 40 கிலோவிற்கு ரூ.50 பெற்றுகொண்டு தான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம், வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பழுத்து அழுகி வீணாகின்றன. மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி ஆகிய பூக்கள் பறிக்காமல் செடியிலேயே காய்ந்து போகின்றன. மேலும் கேரட், குடை மிளகாய், பச்சைமிளகாய் போன்றவையும் பறிக்கப்படாமல் பாழ்படுகின்றன.