திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய மருத்துவர் ரவீந்திரன் இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மனிதனின் இதயத்தில் ரத்தம் பம்ப் செய்வதற்காக வால்வு உள்ளது. 4 வழித்தடங்களைக் கொண்ட இந்த வாழ்வு முதுமை காலத்தில் சுருங்கிவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதித்து மூச்சுத்திணறல், தலைசுற்றல், நெஞ்சுவலி போன்றவை ஏற்படும்.
முன்பு இந்த வால்வு அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டு வந்தது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வால்வு மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் மாற்றி பொருத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே வால்வுகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் நுண்துளை மூலம் இந்த வால்வு மாற்றப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே இத்தகைய நுண்துளை சிகிச்சை மூலம் வால்வு மாற்றப்பட்டு வந்தது. முதல்முறையாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் துறையூரைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு நுண்துளை சிகிச்சை மூலம் வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
கால் தொடை பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு ரத்தநாளம் மூலம் இதயத்துக்குள் வயர் செலுத்தப்பட்டு, இந்த வால்வு பொருத்தப்படுகிறது. இதற்காக நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரத்த நாளத்தில் உணர்ச்சி இருக்காது என்பதால் நோயாளி சுயநினைவுடன் இருக்கும்போதே இந்தச் சிகிச்சையை செய்யலாம்.