தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை-அன்பில் மகேஷ் - துணைத்தேர்வை எழுத வைக்க நடவடிக்கை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, ஜூன் மாதம் நடைபெறும் துணைத்தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

By

Published : Mar 19, 2023, 5:44 PM IST

துணைத்தேர்வு குறித்து பேட்டி

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலை, கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் "மக்களை தேடி" என்ற குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் குறைகளை தீர்க்க திமுக அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரச்னைகளை புரிந்து கொண்டால் தான், அதற்கு தீர்வு காண முடியும் என்பதால், இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் முழு தேர்ச்சி வழங்கப்பட்டது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும் வரை அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு‌ தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில், இந்த‌ ஆண்டு பொது தேர்வு எழுத முன் வராத பல மாணவர்கள், தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் இடைநிற்றல் என கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்பித்து வருகிறோம். ஆண்டுதோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முன் வருவதில்லை. அதற்கான காரணம் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத முன்வராத 52 ஆயிரம் மாணவர்களை, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வை எழுத வைத்துள்ளோம். அதேபோல தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படவுள்ள துணைத் தேர்வினை எழுத வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நடப்பாண்டுக்கான துணைத் தேர்வு ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி, ஜூலை முதல் வாரம் வரை நடைபெறும்.

கல்வியில் பின் தங்கிய 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அத்தகைய வகுப்புகளை நடத்த ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். அந்த திட்டத்தை வரும் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.

இதையும் படிங்க: கல்வி நிலையங்களில் செல்போன் பயன்பாடு.. அறிவற்ற தமிழ்ச்சமூகமே உருவாகும்.. கே.எஸ்.அழகிரி ஆதங்கம்..

ABOUT THE AUTHOR

...view details