தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 13, 2023, 9:53 AM IST

ETV Bharat / state

ஓபிஎஸ்-ன் பிரம்மாஸ்திரம்.. கை கொடுப்பார்களா சசிகலா, டிடிவி.. திருச்சியில் மாநாடு வியூகம் என்ன?

அஇஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 24-ஆம் தேதி திருச்சியில் நடத்தவுள்ள மாபெரும் மாநாடு திருப்புமுனையாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி மாநாட்டின் மூலம் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிப்பாரா என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை:அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அப்போது இருந்து நீதிமன்றங்களை 10 முறை நாடிய ஓபிஎஸ், பொதுக்குழு செல்லாது என்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தவிர்த்த அனைத்திலும் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஓபிஎஸ் மக்களை சந்திக்கும் முடிவை எடுத்துள்ளார். திருச்சி மாநாட்டிற்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் தலைவர்கள் மறைவிற்கு பிறகு இது போன்ற பிளவுகள், பிரிவுகள் ஏற்படுவது இயல்பு.

அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்த போது ஜானகி, ஜெயலலிதா அணியாக செயல்பட்டது. அப்போது இரண்டு பேரும் தனது செல்வாக்கை நிரூபிக்க பல பொதுக்கூட்டங்களை நடத்தினர். 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிராக தற்போது திருச்சி எம்.பி.யாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசர் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்து கொண்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வாகி இருந்ததால் பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.அப்போது ஜெயலலிதாவிற்கு எதிராக பல பொதுக்கூட்டங்களை திருநாவுக்கரசர் நடத்தினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் நடத்தினார். அன்றைய காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்ததால் ஓபிஎஸ் அணியில் இருந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டதால் அணிகள் இணைந்தனர். ஆனால் தற்போது ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைய வாய்ப்பை இல்லை என்று கூறப்படுகிறது.

தர்மயுத்த காலத்தில் ஓபிஎஸ் நடத்திய பொதுக்கூட்டங்கள் அவருக்கு சிறிதளவு செல்வாக்கை உயர்த்தி இருந்தது. அதே போன்று திருச்சி மாநாடும் திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். தற்போது உள்ள நிலவரப்படி ஓபிஎஸ்க்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளில் மிக முக்கியமான ஒன்று தேர்தல் ஆணையத்தில் இன்னும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை என்பதுதான்.

அது ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்கட்டும், நாம் மக்களை சந்திக்கலாம் என்று ஓபிஎஸ் கிளம்பியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறி கொண்டே வந்தார். சமீபத்தில் திருச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "திருச்சி மாநாட்டிற்கு முறைப்படி சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்" என கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய சசிகலா ஆதரவாளர் ஸ்ரீதேவி பாண்டியன், "மாண்புமிகு ஐயா அவர்களுக்கு, உங்கள் சுயநலத்திற்காக இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்தீர்கள். இப்பொழுது உங்கள் சுயநலத்திற்காக இவர்கள் இருவரையும் அழைக்கிறீர்கள். நீங்கள் அழைத்ததும் ஓடி வருவதற்கு இவர்கள் இருவரும் நீங்கள் உருவாக்கிய தொண்டர்கள் அல்ல. உங்களை உருவாக்கிய தலைவர்கள். தயவு செய்து உங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்யாதீர்கள். உங்களை நம்பி உள்ள தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு அதற்குப் பிறகு முடிவெடுங்கள்" என கூறினார்.

டிடிவி தினகரன் ஏற்கனவே அவருடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார். அதவாது, "நான் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகின்றேன். திமுகவை வீழ்த்துவதற்கு தேர்தல் அரசியலில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். மற்றப்படி இணைப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை" என கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் மூன்று பேரும் ஒன்றிணைவார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் சமீப கால நடவடிக்கைகளில் ஓபிஎஸ் மட்டுமே இணைப்பு குறித்து பேசுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு கூட இரண்டு பேரும் செல்லாத நிலையில் மாநாட்டில் இவர்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் திருச்சி மாநாட்டின் மூலம் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில் ஓபிஎஸ் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்ணைப்பாளர் நான் தான் என்ற முறையில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமனம் செய்து வருகிறார். அந்த நிர்வாகிகளை வைத்து தமிழகம் முழுவதிலும் இருந்து மக்களை அழைத்து வருமாறு ஓபிஎஸ் அறியுறுத்தியுள்ளார். சுமார் 5 லட்சம் பேரை கூட்டுவதற்கு ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ஓபிஎஸ் அறிவித்துள்ள மாநாடு குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணையோடு எம்.ஜி.ஆர்.மாளிகையை ஓபிஎஸ் அடித்து நொறுக்கியுள்ளார். இது போன்ற செயல்பாடுகளை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓபிஎஸ் அறிவித்திருப்பது மாநாடு அல்ல, தெருமுனைக் கூட்டம்" என கூறினார்.

இது குறித்து நம்மிடையே பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "திருச்சி மாநாடு ஓபிஎஸ்க்கு திருப்புமுனையாக அமையும் என்று தோன்றவில்லை. தர்மயுத்தம் காலகட்டம் வேறு, தற்போது ஓபிஎஸ்க்கு இருக்கக்கூடிய செல்வாக்கு வேறு என்பதால் அவருடைய செல்வாக்கை அதிகரிப்பதற்கு சிரமம். ஏறக்குறைய அதிமுக எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டது. சசிகலா, டிடிவி தினகரனை நீக்கியத்தில் ஓபிஎஸ்ஸிற்கும் பங்கு இருப்பதால் அவர்களும் ஓபிஎஸ்ஸை ஏற்பது கடினம். இருந்தாலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்த காரணத்தால் மாநாட்டிற்கான கூட்டத்தை கூட்டி விடுவார். அது பெரிய அளவில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்க உதவுமா என்பது சந்தேகம்தான்" என கூறினார்.

பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனுடைய இறுதி விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. இதிலும் ஓபிஎஸ்க்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: "சட்டப்பேரவை இல்லை; மன்னராட்சி தர்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details