தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 2:46 AM IST

ETV Bharat / state

வெற்றிவேல் யாத்திரை தொடங்கும் பாஜக!

சென்னை: மத்திய அரசின் சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வெற்றிவேல் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வெற்றிவேல் யாத்திரை !
மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வெற்றிவேல் யாத்திரை !

சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 'வெற்றிவேல் யாத்திரை' அறிவிப்பு மற்றும் முத்திரையை அறிமுக நிகழ்வு வெள்ளிக்கிழமை (அக்.9) நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், செய்தியாளர்களை சந்தித்த பேசியபோது, "மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழர்கள் மத்தியில் எடுத்துரைக்க வெற்றிவேல் யாத்திரை எனும் பரப்புரை பயணத்தை தமிழ்நாடு பாஜக முன்னெடுக்கவுள்ளது.

நவம்பர் மாதம் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி இந்த யாத்திரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில் நிறைவடையும்.

வருகின்ற 2021 ஆம் தேர்தலில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறச் செய்ய இந்த யாத்திரை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் இந்த யாத்திரை மூலமாக எடுத்து உரைக்க இருக்கிறோம்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழர் கடவுளான கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காணொலி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

குறிப்பாக, கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வேல் பூஜையில் மட்டும் 65 லட்சம் குடும்பங்கள் பங்கேற்றன.

கறுப்பர் கூட்டத்தின் மீது தமிழ்நாடு அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கறுப்பர் கூட்டத்தை ஏன் கண்டிக்கவில்லை?

கறுப்பர் கூட்டத்திலிருந்து கைது செய்யப்பட்ட ஒருவர் திமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர்.

அரசு சார்பில் கரோனா நெருக்கடி காலத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி மதிப்பிலான உதவிகளை தமிழ்நாடு அரசிற்கு வழங்கியுள்ளது.

ஒரு கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 500 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 41 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்எஸ்எம்இ, சிறுகுறு தொழில்களுக்கு உதவி செய்துள்ளது.

மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரு வேலையாக இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியைப் போல தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நாங்கள் நிறுவுவோம். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ்நாடு பாஜகவின் வாழ்த்துகள்.

கன்னியாகுமரி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி. போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். மியான்மரில் இருந்து 8 மீனவர்களை மீட்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி" என்றார்.

முன்னதாக, இந்நிகழ்வில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன், செய்தித் தொடர்பாளர் டி.கே. ராகவன், நடிகை காயத்ரி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details