கரோனா வைரஸ் பரவல் சர்வதேச அச்சுறுத்தலாக மாறி, கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலால் உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர, மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மே 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை முதல்கட்ட மிஷனும், மே 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை இரண்டாம் கட்ட மிஷனும், ஜூன் 11ஆம் தேதி முதல் 30 வரை மூன்றாம் கட்ட மிஷனும், ஜூலை 15 முதல் 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட மிஷனும் செயல்படுத்தப்பட்டது. வரும் 5ஆம் தேதிமுதல் ஐந்தாம் கட்டதாக இந்த மிஷன் மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கிர்கிஸ்தான், ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களும், 751 சர்வதேச விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றின் விமானங்களும் இந்த மிஷன்களில் மத்திய அரசால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.