தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்! - மின்வாரிய ஊழியர்கள்

சென்னை : மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!

By

Published : Nov 4, 2020, 9:11 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (நவ.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடிவரும் நிலையில், அவர்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் அரசு அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவு பகல் கண் துஞ்சாது, கடமை தவறாது அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

மின்சாரத்துறை முற்று முழுதாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற மின்சார வாரிய ஊழியர்களின் அச்சம் நியாயமானது. உப்பூர், உடன்குடி, எண்ணூர் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களில் பணியாற்றி வந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்துவிட்டு அந்தப் பதவி இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணை மின் நிலையங்களை, ஓய்வுபெற்ற மின்வாரிய பணியாளர்களை கொண்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மூன்று இடங்களில் துணை மின் நிலையங்களை இயக்கவும், பராமரிக்கவும் இரண்டு ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உயரழுத்த மின் பாதையை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்த புள்ளிக் கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவை யாவுமே மின்சாரத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்முயற்சியாகும். பலகோடி மதிப்புள்ள துணை மின் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பது அரசுத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்பளிப்பதுடன், கட்டுப்பாடற்ற மின்கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைக்ககூடிய கோரிக்கைகளான தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி திட்டங்கள், மின் பகிர்மானம் மற்றும் பராமரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள 42,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆவண செய்ய வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிக்கால அடிப்படையிலான ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம், விடுமுறை நாள்களுக்கான ஊதியம் ஆகியவற்றை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தபடி ஒருநாள் ஊதியமாக 350 ரூபாயும், விழாக்கால ஊக்கத்தொகையையும் முறையாக வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details