தமிழ்நாடு

tamil nadu

'பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்

By

Published : Nov 13, 2020, 4:49 PM IST

சென்னை : ஆளுநரின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பதை பயன்படுத்தி பேரறிவாளனை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளனை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
பேரறிவாளனை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுவர் விடுதலைக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளை கடந்த பிறகும், அது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்த குரலில் எழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேச துரோக குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது.

இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் தண்டனையை அனுபவித்துவருவது மிகப்பெரும் அநீதியாகும். ராஜீவ் காந்தி உயிரிழக்க காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் பேரறிவாளனை 29 ஆண்டுகளாக சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.

இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான கொலை வழக்குதான். அதாவது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும்போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும்?. பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதினேன் என வாக்குமூலத்தைப் பதிவுசெய்த முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை அலுவலர் தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனைப் பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.

வழக்கின் முழுவிசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை எனபதையும், வழக்கில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும், விடைதெரியா மர்மங்களும் ஏராளமாக உள்ளன என்பதையும், வழக்கை விசாரிக்கும்போது சில முக்கியப் பிரமுகர்களுக்குப் பாரபட்சம் காண்பிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது என்பதையும் மத்தியப் புலனாய்வுத்துறை அலுவலர் ரகோத்தமன் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இத்தோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கே.டி.தாமஸ், எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறார்.

‘ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்!’ எனும் ஒற்றைமய, ஒருமுகப்படுத்தும் கொள்கையைத் தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஒரே நீதி’ என்பதில் மட்டும் விதிவிலக்காக மாறி எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது நகைமுரண். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும். அதனை விடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் பிரதிநிதி அல்லாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தமிழ்நாடு அரசு நின்று 161ஆவது சட்டப்பிரிவின்படி, எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்திட வேண்டும் என்பதுதான் 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமாக இருக்கிறது. இந்நேரத்தில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலம் மிகவும் குன்றியிருக்கிற சூழலில் அவர்களுக்கு உற்றத் துணையாய், உளவியல் பலமாய் பேரறிவாளன் உடன்நிற்க வேண்டியது பேரவசியமாகிறது.

ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details