மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சிறை தண்டனை காலம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் சூழலில் அவர்களது சொத்துகள் மீது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,500 கோடிவரை வரி ஏய்ப்பு செய்ததும், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்ததும் கண்டறியப்பட்டது.
அதில், சிலவற்றை 2019ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் முடக்கியதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது ரூ.2000 மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.