மணலூர் அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தின் அருகே அமைந்துள்ள கண்மாயில் குடிமராமத்து பணி என்ற பெயரில் சவுடு மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த மகேஷ் ராஜா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மதுரை மாவட்ட எல்லை பகுதியில் (சிவகங்கை மாவட்டம் அருகே) வைகை நதிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர். இந்தப் பகுதியில் தற்போது தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் கீழடி பகுதி உட்பட பல இடங்களில் சங்க காலம் முதல், வைகை நதிக் கரையோரம் வாழ்ந்த மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய பொருள்கள் போன்றவை கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து வருகிறது.
அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவைக் கடந்தே குடிமராமத்து பணிகள் நடைபெற வேண்டும்.