தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்! - DMK leader Stalin's letter to seven state chief ministers

சென்னை : மாணவர்களின் நலன் கருதி நீட், ஜெ.இ.இ. போன்ற தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
சட்டப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

By

Published : Aug 27, 2020, 3:02 PM IST

மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளன. அதேபோல, பாஜக ஆட்சியில் இல்லாத ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2020 எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே தேர்வுகள் ஜூன் 2020க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கியப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. விமானம், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாததுடன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், புதுச்சேரி முதலமைச்சர்கள் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதைத் அனைவரும் அறிவீர்கள். மேலே விளக்கப்பட்ட கடுமையான சிக்கல்களையும், மாணவர்களின் நல்வாழ்வையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details