இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதி என்பது சாதி - மத ரீதியான ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் அகற்றி, சக மனிதர்களைச் சமமாகக் கருதுவது மட்டுமல்ல; பாலினரீதியாக ஆண் - பெண் என்கிற ஏற்றத்தாழ்வையும் மாற்றி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என அனைத்து வகையிலும் சமமான நிலையை அடைவதாகும். திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களை ஒட்டி, கருணாநிதியின் ஆட்சிக்காலம் நெடுகிலும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு எனப் பெண்கள் தங்களின் உரிமையைப் போற்றி வாழ்வதற்கானப் பல திட்டங்களை, இந்தியாவுக்கே முன்னோடியாக வழங்கினார். முத்தான இந்தத் திட்டங்களில் முத்தாய்ப்பானது, குடும்பச் சொத்தில் பெண்களுக்கான சம உரிமை வழங்கும் சட்டமாகும்.
செங்கல்பட்டில் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம், குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தியது. தொடக்கக் காலம் முதற்கொண்டே, பெண்ணினத்தின் விடுதலை - மறுமலர்ச்சி - உரிமை ஆகியவற்றைப் போற்றிய தந்தை பெரியாரின் பெருங்கனவை, ஏறத்தாழ 60 ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக முதலமைச்சரான கருணாநிதி நனவாக்கினார். குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை கருணாநிதி தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது.
வர்ணாசிரமம் - மனுஸ்மிருதி போன்றவற்றைக் காரணம் காட்டி பெண்களுக்கான சொத்துரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த சமுதாயத்தில், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரலைச் சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சுதந்திர இந்தியாவில் சளைக்காமல் போராடினார். நாடாளுமன்றத்தில் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை உள்ளடக்கிய இந்து நடைமுறைச் சட்டத் தொகுதியை (Hindu Code Bills) நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், தொலைநோக்குடையவை - உறுதியானவை - உரிமைக் குரலாக ஒலித்தவை. எனினும், பழமைவாதம் மாறாத - மதவாத அரசியல் சக்திகள் அதனைத் தடுத்தே வந்தன.
மனைவி - மகள் - அடிமைகள் இவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிற பழைய விதிகளை மீறக்கூடாது எனக் குறுக்கே நின்றன. அதனால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள், தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது சமூக நீதிப் போராட்டத்தின் வரலாறு.
பல தடைகளைக் கடந்து 1956ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது முழுமையானதாக நிறைவேற்றப்படவில்லை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதில் பல சிக்கல்கள் நீடித்தன. ஓர் ஆணின் தனிச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தாலும், பரம்பரைக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கான பங்கு கிடைப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. இந்நிலையில் தான், 1989ஆம் ஆண்டில் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார், கருணாநிதி.
பங்காளி என்றால் அது ஆண்களுக்கு மட்டுமே உரிய சொல்லாக இருந்து வந்த நிலையில், குடும்பச் சொத்து எனும் பங்கை ஆள்வதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற சட்டத்தின் மூலம் அவர்களையும் 'பங்காளி' ஆக்கி, ஆண்டாண்டு காலப் பழியைத் துடைத்தெறிந்தவர், கருணாநிதி.