தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணை! - மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு

சென்னை : 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணை!
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணை!

By

Published : Sep 22, 2020, 6:50 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, அன்றிரவு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் அதிமுக அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதனையடுத்து, முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 2017 பிப்ரவரி 18ஆம் தேதி பேரவையில் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், "ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத அவைத் தலைவர், திமுக உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது. எனவே, இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்குகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கும் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details