இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மும்பையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதன்படி மும்பையில் உள்ள பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூர் ஸ்டார் ஆங்கிலப்பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றது.
மும்பையில் தமிழ் வழியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் இத்தேர்வு மையங்களில் 2019-20ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிட பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு கரோனா தொற்றிலிருந்து பள்ளி மாணவர்களை காத்திடும் பொருட்டு, தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், வருகைப் பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என கடந்த ஜுன் 9ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு: 1000 கி.மீ. பின்னோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர்!