தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2021, 7:09 AM IST

ETV Bharat / state

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

சென்னை: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் 29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Chief Minister
Chief Minister

சென்னை மாவட்டம், அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 20 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய வளாக கட்டடம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் வடக்கு வட்டம், துடியலூர் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் அலுவலகம், அதன் 5 சார்நிலை அலுவலகங்கள் செயல்படும் வகையில் 14,096 சதுரடி கட்டட பரப்பளவில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் மற்றும் சார்நிலை அலுவலகக் கட்டடம்.

காஞ்சிபுரம் ஓரிக்கை கிராமத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகக் கட்டடம். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம் - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகம் மற்றும் திருநெல்வேலி - அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் ஆகிய இடங்களில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகக் கட்டடங்கள்.

திருப்பத்தூரில் 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என மொத்தம் 29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை அண்ணா நகரில் தொழிலாளர் ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கிடும் வகையில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள தொழிலாளர் ஆணையரக வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், வங்கி நிதிச்சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட எம்எஸ்இ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள சுமார் 90,000 அமைப்புசாரா ஓட்டுநர்களின் நலன் காக்க, முதற்கட்டமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,000 ஓட்டுநர்களுக்கு, தலா 2,000 ரூபாய் மதிப்பீட்டிலான சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி மற்றும் தீயணைப்பான் ஆகிய சாதனங்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் 5 அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

2016 - ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக முன்னாள் சேலம் மாவட்ட ஆட்சியரும், தற்போது பிற்படுத்தப்பட்டோர் , மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளருமான வா சம்பத்திற்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பரிசு கேடயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை பா.பென்ஜமின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details