தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் தொழிற்சங்கத்தில் இணைந்தால் மீண்டும் வேலை - சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது ? - Senkodi Labourer Wing

பணி நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை பாரதிய மஸ்தூர் சங்கத்தில் சேர்த்தால் உடனடியாக பணி தருவதாக மாநகராட்சி சென்கொடி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பாஜகவின் தொழிற்சங்கத்தில் இணைந்தால் மீண்டும் வேலை - சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது ?
பாஜகவின் தொழிற்சங்கத்தில் இணைந்தால் மீண்டும் வேலை - சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது ?

By

Published : Oct 1, 2020, 8:51 PM IST

சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை பாரதிய மஸ்தூர் சங்கத்தில் சேர்த்தால் உடனடியாக பணி தருவதாக மாநகராட்சி சென்கொடி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, செங்கொடி சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் செங்கொடி சங்கப் பிரதிநிதிகள் நால்வரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநகராட்சி நிர்வாகம் கூலியை உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால், அதற்கு மாறாக அடுத்த நாள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்த பணியாளர்கள் 300 பேரையும், பேச்சுவார்த்தைக்கு வந்த நிரந்தரப் பணியாளர்கள் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து செங்கொடி சங்கத்தினர் உண்ணாநிலை, முற்றுகை என பல கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஊழியர்களின் தொடர் போராட்டத்தை அடுத்த செப்டம்பர் 23ஆம் தேதி மாலை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய மாநகராட்சி தரப்பு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.

ஆனால், பணியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 300 நபர்களில் வெறும் 90 நபர்களை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் பணியில் இணைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த செங்கொடி சங்கத்தினரிடம் கூறியபோது,"பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

அதேபோல, பேச்சுவார்த்தையிரும் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், தற்போது செங்கொடி சங்கத்தில் இருந்து விலகி கொண்டு பாரதிய மஜ்தூர் சங்கம் இணைந்தவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலையை நிர்வாகம் உருவாக்கி உள்ளது. பாரதிய மஸ்தூர் சங்கம் மூலம் சென்றதால் சுமார் 87 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் இடம் சென்றோம், அவர் இணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவித்தார். பின்னர், நாங்கள் மதுசூதனன் ரெட்டியிடம் இது தொடர்பாக கேள்விக்கேட்டபோது"எப்படி இருந்தாலும் அவர்களும் உங்க தொழிலாளிகள் தானே என்று கூறினார்.

நியாயமான கோரிக்கைக்காக போராடிய அனைவருக்கும் பணி கிடைக்க வேண்டுமென நாங்கள் மீண்டும் மாநகராட்சி உடன் பேசியுள்ளோம். நிரந்தர பணியாளர்கள் இடைநீக்கம் பற்றி இன்னும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முதலில் தீர்வுக் கிடைத்தால் போதுமானது" என தெரிவித்தார்.

பாரதிய மஸ்தூர் சங்கம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அதன் நிர்வாகி ஒருவருடன் பேசியபோது, "தொழிலாளிகள் எங்கள் இடம் வருகின்றனர். அதனால் தான் நாங்கள் அவர்களுக்காக மாநகராட்சி ஆணையரிடம் பேசி, மாநகராட்சியில் மீண்டும் அவர்களுக்குப் பணி வாங்கி தருகிறோம். பணி வாங்கி தருவதால் எங்கள் சங்கத்தில் சேர்ந்து கொள்கின்றனர்.

வருபவர்களை நாங்கள் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்" என கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details