தமிழ்நாடு

tamil nadu

வீரமாமுனிவர், தேவநேயப் பாவாணர் பெயர்களில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்!

By

Published : Sep 28, 2020, 6:56 PM IST

சென்னை: தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் ஆகிய தமிழ்ச் சான்றோர் பெயர்களில் வழங்கப்படும் விருதுகளுக்கு தமிழறிஞர்களை விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வீரமாமுனிவர் போன்ற தமிழ்ச்சான்றோர் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருது!
வீரமாமுனிவர் போன்ற தமிழ்ச்சான்றோர் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருது!

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.

அந்தவகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் ஆகிய தமிழ்ச்சான்றோர் பெயர்களில் விருதுகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்குத் தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படவுள்ளது.

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கியும் தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதிவாய்ந்த ஒருவருக்கு வீரமாமுனிவர் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விரு விருதுகளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும். தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் (sorkuvai.com) வலைத்தளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி 10/10/2020ஆம் தேதிக்குள் இயக்ககத்திற்குக் கிடைப்பதுபோல், இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலகக் கட்டடம், முதல்தளம் எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை- 600 028 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக மட்டும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்படும் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சமும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details