ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை பேட்டை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
குளிர்கால கணக்கெடுப்பு பணி
இந்தப் பணிகள் வருகின்ற 21ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாள்கள் நடக்கவுள்ளது. அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதிகளில் 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மாமிச உண்ணிகள்
வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மூன்று நாள்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நாளொன்றுக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாள்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.
சாணம்
தொடர் பணியில் அலுவலர்கள் அடுத்த மூன்று நாள்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடி குளம்பினங்கள்,பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன் மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் சாணங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பு நடைபெறும்.
தாவர வகை
அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்படவுள்ளது. இறுதி நாளான 21ஆம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆய்வு
கணக்கெடுப்பு பணியில்வனத்துறை அலுவலர்கள் கல்லாபுரம் சுற்றில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமராவதி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள்,வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர். அமராவதி வனச்சரகம் சுற்றிலும் மரத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி இதையும் படிங்க:பாபநாசம் அணை நிரம்பியது: தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை