திருப்பூர்:தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருவதால், குளிர் காற்று வீசுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வரக்கூடிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் செண்பகஸ்ரீ கூறுகையில், “திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக மட்டும் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் வந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, புறநோயாளிகள் சுமார் 130 பேர் தினமும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கத்தைக் காட்டிலும் 60 சதவீதத்திற்கு அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருகின்றனர்.