திருப்பூர் மாவட்டம் காமராஜ் சாலையில் இயங்கி வந்த காய்கறிச் சந்தையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.
திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் காமராஜ் சாலையில் வணிக வளாகங்கள் கட்டப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த காய்கறி சந்தை பழைய பேருந்து நிலையம் எதிரே காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
சந்தை மாற்றப்படும் என்று அலுவலர்கள் கூறும்போது காய்கறி வியாபாரிகள் அங்கு மாற்றக்கூடாது, அங்கு போனால் எங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் பிறகு அரசு அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் மாற்றி வைத்தனர்.
300 க்கும் மேற்பட்ட கடைகள் திடீரென மாற்றப்பட்டதையடுத்து அங்கு அடிப்படை கட்டமைப்புகள் சரியில்லை என்று மீண்டும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது . நேற்று பெய்த கனமழையின் காரணமாக புதிதாக காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை மழை நீர் சூழ்ந்துள்ளன.
முழங்கால் அளவு தேங்கியிருக்கும் இந்த மழை நீரால் காய்கறி வியாபாரிகளும் அந்த மார்க்கெட் பகுதிக்கு வரும் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மார்க்கெட் பகுதிகளில் தரையில் வைத்திருந்த கொத்தமல்லி புதினா போன்ற பல்வேறு காய்கறி பொருட்கள் மழை நீரில் மூழ்கியது. தற்போதுதான் மாநகராட்சி அலுவலர்கள் அந்த மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு நாள் பெய்த மழைக்கே இந்த நிலைமை என்றால் வரும் காலங்களில், சந்தை பாதிக்கப்படாமல் இருக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.