கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனா கண்டறியப்பட்டது முதல் திருப்பூர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல் படுத்திய காரணத்தால் திருப்பூர் நகரம், ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. பின்னர், பொருளாதார நடவடிக்கைகளுக்காக பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் பின்னலாடை நிறுவனங்கள் ஓரளவு இயங்கத் தொடங்கின. வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் பெருமளவில் சொந்த ஊர் சென்றுவிட்டதால், திருப்பூரில் தங்கியிருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர். நாளடைவில் தொழிற்சாலைகள் இயக்கம் அதிகரித்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் அரசு உதவியுடன் பணிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட திறக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு பகுதி வாரியாக அலுவலர்கள் குழு செயல்பட்டது. நகரத்தின் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் இயல்புநிலையை எட்டியுள்ளது.
பொதுப் போக்குவரத்தான ரயில்கள் இயங்காத நிலையிலும் நிறுவனங்களின் வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர கரோனா அச்சத்தால் பேருந்தைத் தவிர்த்து பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். போலவே, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் அவினாசி சாலை, குமரன் சாலை, பிஎன் சாலை, பல்லடம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் திருப்பூர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது கண்கூடாகத் தெரிகிறது. சுமாராக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் பயணம் செய்து வருவதாகத் தெரிவிக்கும் திருப்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், வாகனங்களில் செல்வோர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதாகத் தெரிவித்தார்.