திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே சின்னவீரம்பட்டி அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி உள்ளனர். ஓடு கட்டடமாக இருந்த பள்ளியை கான்கிரீட் கட்டடமாக மாற்றம் செய்து, கூடுதல் வகுப்பறைகள் கட்ட 'நமக்கு நாமே திட்டம்' என்பதற்கிணங்க பொதுமக்களிடம் நன்கொடை கோரப்பட்டது.
இதனையறிந்த அதே ஊரை சேர்ந்த இளநீர் வியாபாரியான தாயம்மாள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தாயம்மாள் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் (எ)அய்யாவு ஆகியோர் இளநீர் விற்று சிறுகச்சிறுக சேமித்து வைத்த தொகையை பள்ளி வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது.
திருப்பூர் இளநீர் வியாபாரி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் இதனைக் கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.30) காலை 11.40 மணி அளவில் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில், “இளநீர் வியாபாரி தாயம்மாள் செய்த உதவி குறித்து பேசி பாராட்டு தெரிவித்தார். இதுபோன்று ஏழை- எளியவர்கள் கல்விக்கு உதவுவது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்” எனப் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியை தனது வீட்டில் குடும்பத்தினருடன் தாயம்மாள் கேட்டு மகிழ்ந்தார். ஒருவருக்கு உதவுவது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பது பெரியவர்களின் சொல். ஆனால் பல கோடி மக்கள் கேட்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எனது உதவி குறித்து பேசியது எனக்கு பெருமை அளிக்கிறது. கல்விக்கு உதவி செய்வது என்பது மிகப்பெரிய உதவி எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை