திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கெயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது, "இப்பகுதி விவசாயிகளால்தான் ஊத்துக்குளி வெண்ணை பிரபலம். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் பைப் லைனை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கிறது. உயர் மின் கோபுரம் அமைப்பதை தவிர்த்து நிலத்தடியில் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். இதற்கு முன் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் உள்ள நில உரிமையாளர்களுக்கு உரிய வாடகை வழங்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது நிலம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரிலும் வட மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இருப்பினும் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.