திருப்பூர்:மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பகம் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக, மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று (செப். 2) திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த அரங்குகளை பார்வையிட்ட ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கூடுதல் ஆர்வமுடன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, "மக்கள் சேவையில் மகத்தான 9 ஆண்டுகள் - திட்டங்களும், சாதனைகளும்" என்ற இரு குறிப்பேடுகளை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
மேலும் கல்லூரி மாணவியர்களுக்கு, சந்திராயன் வெற்றி குறித்த காணொலியை ஒளிப்பரப்பு செய்தனர். அதனையடுத்து மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை பேசினார். அப்போது பேசிய அவர், "ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற்று, அந்தக் குழந்தை பள்ளிக்கு செல்லும் பொழுது துவங்கி, வாழ்க்கையின் அனைத்து காலகட்டத்திலும் ஏற்படுகின்ற தேவைகளுக்கு பயன் அளிக்கும் வகையில், ஏராளமான மத்திய அரசின் நலத்திட்டங்கள் உள்ளன. அவைகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
அவரை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசினார். அவர் பேசுகையில், "பாரத பிரதமரின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தி உள்ளது. அதில் மிக முக்கியமாக மற்ற நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் அளவில், சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதித்தது.