தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் களரி போட்டி: 23 பதக்கங்களை வென்ற கோவை ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்! - tiruppur Kalaripayattu

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான களரிப்பயட்டு(Kalaripayattu) போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் தங்கம் உட்பட 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கம் வென்ற மாணவ-மாணவிகள் புகைப்படம்
பதக்கம் வென்ற மாணவ-மாணவிகள் புகைப்படம்

By

Published : Jun 27, 2023, 7:36 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் சார்பாக கடந்த 24-ஆம் தேதி மாநில அளவிலான களரி போட்டி நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வீரமும், சாகசமும் நிறைந்த இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு களரிப்பயட்டு சங்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அந்த மாணவர்கள் மெய்பயட்டு, சுவாடுகள், உருமி, ஹை கிக், ஸ்வார்ட் அண்ட் சீல்ட் ஆகிய 5 பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் அதீத திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். தொடர்ந்து அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதையும் படிங்க:நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு!

குறிப்பாக, ஸ்ரீனிவாசன், தமோஹரா, த்யான், அதிரா, ஈஷா, சுவாமி மஹன்யாஸ், சுவாமி மிதுன் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் யோகா, இசை, நடனம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் சேர்த்து தற்காப்பு கலையான களரியும் கடந்த 15 வருடங்களாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டு அர்ப்பணிப்புக்கு பிறகு கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் 'ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி' என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், இதுபோன்ற பாரம்பரியம் மிக்க இந்திய கலைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:காலாவதியாகாத மாத்திரைகளை தீ வைத்து எரித்த போது விபத்து; அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details