தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2020, 5:50 PM IST

ETV Bharat / state

ஆக்சிஜன் இடையூறால் உயிரிழப்புகள் - ஆட்சியரை மாற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்!

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை மாறுதல் செய்திட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

CPM protest
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருப்பூர்:மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை மாறுதல் செய்திட வேண்டும் என, அரசு மருத்துவமனை எதிரே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது மின்தடை ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியொரு அசம்பாவித சம்பவத்துக்கு பின் இதுதொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு அரசு பணி மாறுதல் செய்திட வேண்டும். முதலமைச்சர் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்து, அதிமுக அரசு நாட்டின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு வழங்கும் அரிசி தரமற்றதா?

ABOUT THE AUTHOR

...view details