திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சிறப்பு மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு 173 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பிரதமரின் குடியிருப்புத் திட்டம், அம்மா இருசக்கர வாகனம், முதியோர் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், தாய் - சேய் நலப்பெட்டகம், விலையில்லா சலவைப் பெட்டி உள்ளிட்ட ஒரு கோடியே 33 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,"அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டளை. அதுபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறப்பு மனுநீதி நாள் முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்து, ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சென்றடைய வேண்டும்.
அதனடிப்படையில், மாவட்டம் பிரிக்கப்பட்ட சில மாதத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற முகாம்களை நடத்தி இதுவரை 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளன. அரசு இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 50 விழுக்காடு மழைப் பொழிகிறது.