திருப்பத்தூர்: வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என ஏலகிரி மலையில் நடந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்கில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் காமராஜ், பொருளாளர் முரளிபாபு, செயலாளர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் துணைத் தலைவர் தேவகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம்:
- தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனவே, வழக்கறிஞர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அவசர சட்டம் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.
அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
- வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்து மருத்துவ அட்டை வழங்க வேண்டும்.
சுங்கசாவடிகளில் கட்டண விலக்கு:
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பயணித்து மக்கள் சேவை ஆற்றும் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு
சுங்கசாவடிகளில் (டோல்கேட்) கட்டண வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.