திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பேர்ணாம்பட் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஆம்பூர் வடச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மோனிகா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மோனிகா கர்ப்பமான நிலையில், தலை பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவருக்கு நேற்றிரவு (ஆக.28) பிரசவ வலி அதிகமானதால் மேல்சான்றோர் குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இன்று (ஆக.29) பிற்பகல் மோனிகாவிற்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
இதனால், கோபமடைந்த மோனிகாவின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்தது. இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்துச் சென்றனர்.