திருப்பத்தூர்: சர்வதேச ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஆனால், தற்போது இவை அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இண்டர்நேஷனல் ஆண்டி கரப்சன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு தான் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர். அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை அரை நாள் வாடகைக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டு உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி என்பதால், அனுமதி வழங்கப்பட்டது.
அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் ஏமாந்துள்ளார். வள்ளிநாயகத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது எனவும், எங்களிடம் வள்ளிநாயகம் வருகிறார் எனவும் கூறி ஏமாற்றி உள்ளனர்.